தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்களால் ஒரு புதிய அலையை உருவாக்கியவர் பாரதிராஜா. வரிசையாக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் என வரிசையாக ஹிட் படங்களாகக் கொடுத்த அவருக்கு நிழல்கள் படம் தோல்விப் படமாக அமைந்தது.
இதையடுத்து அவர் ஹிட் படம் கொடுத்து தன்னுடைய கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது மணிவண்ணன் கதை வசனத்தில் உருவாக்கிய திரைப்படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’. இந்த படத்தில் கார்த்திக், ராதா, கமலா காமேஷ், தியாகராஜன் மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்திருந்தனர்.
கமலா காமேஷ் மேடை நாடகங்களில் நடித்து வந்த போது அவரின் கணவரின் நண்பரான பாரதிராஜா அடிக்கடி அந்த மேடை நாடகங்களைப் பார்க்க வருவாராம். அப்போது அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்த பாரதிராஜா தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் 31 வயதே ஆன கமலா காமேஷ் கார்த்திக்கின் அம்மா வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் முக்கியமான ஒரு காட்சியை எடுக்கும் போது கமலா காமேஷ் அழ வேண்டிய காட்சியில் அழுகை வரவில்லையாம். கிளிசரின் போட்டுக்கூட அவருக்குக் கண்களில் கண்ணீர் வரவில்லையாம். இதனால் கோபமான இயக்குனர் பாரதிராஜா அவரை அழ வைக்க ஒரு மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
கமலா காமேஷ் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் தந்த அதிர்ச்சியில் அழுதுகொண்டே அந்த காட்சியில் நடித்து முடித்தாராம். அதன் பின்னான நீண்ட கிளைமேக்ஸ் காட்சியிலும் ஒரே டேக்கில் நடித்து முடித்தாராம். கிளைமேக்ஸ் காட்சியில் அவர் நடித்த விதம் ஷூட்டிங்கில் இருந்த அனைவரையும் கவர கைதட்டி பாராட்டியுள்ளனர்.
அதன் பின்னர் இயக்குனர் பாரதிராஜா கமலா காமேஷிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாராம். அதன் பிறகு சிறப்பாக நடித்த அவருக்கு தன்னுடைய கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட பல படங்களில் வாய்ப்பளித்தாராம். இந்த சம்பவத்தை கமலா காமேஷ் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.