மாயாவி படத்துல சிம்ரன உயர்த்தி ஜோதிகாவ கேலி செஞ்சோம்.. அதுக்கு அவர் ரியாக்‌ஷன் இதுதான் – சிங்கம்புலி ஓபன் டாக்!

By vinoth on சித்திரை 10, 2025

Spread the love

பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அவரின் வித்தியாசமான மாடுலேஷனும் உடல்மொழியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அதையடுத்து அவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து ‘ரெட்’ மற்றும் சூர்யாவை வைத்து ‘மாயாவி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஓடாததால் அவர் நடிப்புப் பக்கம் தன்னை மடைமாற்றிக் கொண்டார்.

   

தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் சிங்கம் புலி சமீபத்தில் ரிலீஸாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படத்தில் பெண் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒருவராக நடித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதுவரை அவரைப் பற்றி இருந்த காமெடியான வெகுளி இமேஜை இந்த கதாபாத்திரம் மொத்தமாக உடைத்துள்ளது. இதையடுத்து இப்போது அவருக்கு வித்தியாசமானக் கதாபாத்திரங்கள் வரத் தொடங்கியுள்ளன.

   

சிங்கம் புலி இயக்கிய ‘மாயாவி’ திரைப்படம் கமர்ஷியல் வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதன் நகைச்சுவைக் காட்சிகள் தனித்துவம் கொண்டவையாக இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. அந்த படத்தில் ஜோதிகா, நடிகை ஜோதிகாவாகவே நடித்திருப்பார். அவரை சூர்யாவும், சத்யன் கதாபாத்திரமும் கடத்தி வந்து வைத்திருக்கும் போது சத்யன் கதாபாத்திரம் ஜோதிகாவை விட சிம்ரன்தான் சிறந்த நடிகை என்றும் ஜோதிகா ஓவர் ஆக்டிங் நடிகை என்றும் கேலி செய்வார்.

 

இந்த காட்சிகளை எடுத்த போது ஜோதிகா எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் வசனங்களைப் பேசி நடித்தார் என்றும் அவருக்கு எந்த ஈகோவும் இல்லை என்றும் இயக்குனர் சிங்கம்புலி தற்போது ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஜோதிகாவும் சிம்ரனும் கிட்டத்தட்ட சமகாலத்தில் பிரபல நடிகைகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.