தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
விஜய்யின் இந்த அசுர மார்க்கெட் வளர்ச்சி சமிபகாலத்தில் எக்குதப்பாக வளர்ந்து வந்தது. இதற்கு அவர் அட்லி, முருகதாஸ் மற்றும் லோகேஷ் போன்ற புதிய தலைமுறை இயக்குனர்களோடு கைகோர்த்ததுதான். அதனால்தான் எட்ட முடியாத உயரத்தில் இருந்த ரஜினியை கூட எட்டிப் பிடித்தார்.
காதல் படங்களில் அதிகமாக நடித்து வந்த விஜய் 2000 களில் தன்னுடைய ரூட்டைக் கண்டுபிடித்து கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களாக நடித்துத் தள்ளினார். வழக்கமாக நடிகர் தங்களுடைய 50 ஆவது படத்தை கண்ணும் கருத்துமாக நல்ல கதை, நல்ல இயக்குனரை வைத்து எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக விஜய் சுறா என்ற மொக்கைப் படத்தைக் கொடுத்தார். அந்த படத்தின் இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் அதற்கு முன்னர் பெரிதாக எந்த ஹிட் படத்தையும் கொடுத்ததில்லை.
அப்படி ஒரு படம் நடித்ததையே விஜய் கொடுங்கனவாக நினைத்து மறந்திருப்பார். ஆனால் இப்போது அந்த படத்தின் இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் சுறா படத்தின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது பற்றி பேசி தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘சுறா படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் தேவ் நடித்தது பொருத்தமாக அமையவில்லை. ஒருவேளை பசுபதி அல்லது பிரகாஷ் ராஜ் போன்ற இங்குள்ள நடிகர்கள் நடித்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும்” எனக் கூறியுள்ளார். கதை திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டு இப்படி சாக்கு போக்கு சொல்கிறாரே என அவரை தற்போது நெட்டிசன்கள் தங்கள் ட்ரோல் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.