பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டும் புன்னகை மன்னன் கமல் பாணியில் உயிர் தப்பிய இளம்பெண்..

By Arun on சித்திரை 12, 2024

Spread the love

பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து பிழைத்தவனும் உண்டு, கால் தடுக்கி விழுந்து உயிரிழந்தவனும் உண்டு என்று பேச்சு வழக்கில் ஒரு சொலவடை உண்டு. பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து தப்பித்தவர் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு இளம்பெண் உயிரோடு வாழ்ந்திருக்கிறார். அந்த அதிர்ச்சியான ஆச்சரியத்தை குறித்துதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பெரு நாட்டைச் சேர்ந்த 17 வயது பெண்ணான ஜூலியன் தனது தாயுடன் லிமா என்ற நகரில் இருந்து புக்கல்பா என்ற நகருக்குச் செல்ல விமானம் ஏறினாள். ஜூலியனின் தந்தை புக்கல்பா நகரில் தங்கி பணிசெய்துகொண்டிருந்தார். ஜூலியன் தனது தாயாருடன் லிமாவில் வசித்து வந்தாள்.

   

கிறுஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறையை தனது தந்தையுடன் கொண்டாட ஜூலியன் தனது தாயாருடன் லிமாவில் இருந்து புக்கல்பாவிற்கு லேன்ஸா 508 என்ற விமானத்தில் பயணம் செய்தாள். விமானம் தரையில் இருந்து வானத்தில் பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென வானிலை மோசமானது. இடியும் மின்னலுமாக தாக்க அந்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஜூலியன் உட்பட 93 பேரும் உயிரை கையில் பிடித்திருந்தனர்.

   

 

திடீரென விமானம் டமால் என வெடித்ததில் ஜூலியன் தனது இருக்கையோடு வானத்தில் தூக்கி வீசப்பட்டாள். அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி. விமானம் வெடித்ததில் பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜூலியன் காட்டுப்பகுதியில் இருந்த அடர்த்தியான மரங்களின் ஊடாக முட்டி மோதி ஒரு வழியாக பாதுகாப்போடு உயிருக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல் தரையில் விழுந்தாள்.

ஆனால் மரங்களில் முட்டி மோதி விழுந்ததில் ஜூலியனின் உடலில் பலத்த அடி. கால்களில் பலத்த காயம். உடலில் பல இடங்களில் சிராய்ப்பு. ஒரு கண் பகுதி பயங்கரமாக அடிபட்டிருந்தது. கீழே விழுந்த பல மணிநேரங்கள் மயக்க நிலையிலேயே இருந்தார் ஜூலியன்.

பல மணி நேரம் கழித்து கண்களை திறந்த ஜூலியனுக்கு எதுவுமே புரியவில்லை. “நான் இன்னும் சாகவில்லையா? எனது அம்மா எங்கே? என்னுடன் பயணித்த பயணிகள் எங்கே? இது என்ன சொர்க்கமா? இல்லை நரகமா? நாம் நிஜமாகவே உயிரோடுதான் இருக்கிறோமா?” என்று மனது குழப்பமடைந்தது. அவளது கண்களுக்கு விமானத்தில் உதிரி பாகம் கூட தென்படவில்லை. அந்தளவுக்கு எங்கோ தொலைவில் வீசப்பட்டிருக்கோம் என்பதை புரிந்துகொண்டாள்.

“சரி, கடவுளின் அருளால் நான் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன். இந்த காட்டுக்குள் இருந்து எப்படி வெளியே போவது?” என்று திணறத்தொடங்கினாள் ஜூலியன். கிட்டத்தட்ட ஒரு வாரமாக அந்த காட்டுப்பகுதியிலேயே கிடந்தாள் அவள். அவளது கைப்பையில் ஒரு கேக் இருந்தது அதை மட்டும் முதல் நாளில் சாப்பிட்டாள். அதன் பின் அந்த காட்டில் கிடைத்ததை எல்லாம் சாப்பிட ஆரம்பித்தாள் ஜூலியன்.

“இனி இங்கே இருந்தாள் வேலைக்கே ஆகாது” என்று முடிவெடுத்த ஜூலியன் அடிபட்ட கால்களோடு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். சிறிது தூரத்தில் ஒரு நீரோடையை கண்டுபிடித்த ஜூலியன் அந்த நீரோடை செல்லும் வழியிலேயே நடக்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் நடைபயணத்திற்கு பிறகு ஒரு குடிசையை கண்டுபிடித்தாள். அந்த குடிசை ஒரு மரவெட்டியின் குடிசை. ஜூலியனின் கதையை கேட்ட அவர், பரிதாபப்பட்டு அவளுக்கு உணவும் மருந்தும் அளித்தார். அதன் பின் சில நாட்கள் கழித்து அவளை பத்திரமாக அழைத்துச் சென்று புக்கல்பாவில் உள்ள அவளது தந்தையிடம் ஒப்படைத்தாள். அவளை பார்த்ததும் அவளது தந்தை கதறி அழுதபடி கட்டிப்பிடித்துக்கொண்டாராம்.

விமானத்தில் விமான ஓட்டிகள், பணிப்பெண்கள் உட்பட 93 பேரில் உயிர் பிழைத்த ஒரே ஆள் ஜூலியன் மட்டுந்தான் என்பது பின்னாளில் விசாரணையில் தெரிய வந்தது. ஜூலியனின் தாயும் அந்த விபத்தில் அகால மரணமடைந்திருந்தார். இதனை தொடர்ந்து ஜூலியன் தனது தந்தையுடன் வாழத்தொடங்கினார். அவரை குறித்து பல டாக்குமெண்ட்ரி திரைப்படங்கள் பின்னாளில் உருவானது.