தாஜ்நகரியின் ஜகதீஷ்புரா பகுதியில் திருமணமான முதல் இரவிலேயே அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக விழுமியங்களைச் சிதைப்பதாக அமைந்துள்ளது. சிகந்திரா பகுதியைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் சகோதரருக்கும், ஹத்ராஸைச் சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நடந்த நிலையில், முதலிரவன்று அந்தப் பெண் தனக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை என்றும், வெறும் பணத்திற்காகவே வந்ததாகவும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். தன்னிடம் 90 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கினால் மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபடுவேன் என அவர் நிபந்தனை விதித்தது மணமகன் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
கணவன் தரப்பால் அவ்வளவு பெரிய தொகையைத் தர இயலாது என்று மறுக்கப்பட்டபோது, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணப்பெண் தனது பெற்றோரை அடியாட்களுடன் வரவழைத்து, வீட்டை வெளியிலிருந்து பூட்டி குடும்பத்தினர் அனைவரையும் சிறைபிடித்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த பிஎன்ஜி (PNG) எரிவாயுக் குழாயை உடைத்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணமகன் குடும்பத்தினர் தப்பிக்க, அந்தப் பெண் மாமியார் வீட்டிலிருந்த விலையுயர்ந்த நகைகளுடன் தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து ஜகதீஷ்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், ஆரம்பத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மருத்துவர் நீதிமன்றத்தை நாடிப் பெற்ற உத்தரவின் பேரில், தற்போது மணப்பெண் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இச்சம்பவம் வரதட்சணைக் கொடுமை சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
