பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

By Muthu Mani on சித்திரை 16, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் ஒருமுறை மட்டுமே நேரடியாகப் பரப்புரை மேற்கொண்டாலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் தவெக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு தவெக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில் பெண் நிர்வாகிகளை அநாகரிகமாகப் பேசியதுடன், செருப்பால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், அருகில் இருந்த கட்டையை எடுத்து வீசித் தாக்கியதில் தவெக பெண் நிர்வாகி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய அந்த நபர் திமுகவிற்கு ஆதரவாகப் பேசியதாகத் தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

   

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேல் சட்டை அணியாத அந்த முதியவர் தனது வீட்டின் கதவிற்குப் பின்னால் இருந்தபடி, தவெகவினரை நோக்கி ஆவேசமாகச் சத்தமிடுவதும், கையில் இருந்த கட்டையை வீசி அடிக்க முயல்வதும் பதிவாகியுள்ளது. அவருடன் இருந்த பெண்மணி அவரைத் தடுக்க முயன்றும், அவர் தொடர்ந்து அநாகரிகமான வார்த்தைகளைப் பேசி மிரட்டல் விடுத்தது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

தாக்குதலைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த நபரை உடனடியாக அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியபோது, இரவு நேரத்தில் முதியவர்களை விசாரணைக்கு அழைத்து வர முடியாது எனப் போலீஸார் கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து தொண்டர்கள் கலைந்து சென்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தப் போதை ஆசாமியின் அட்டகாசம் திருச்சியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.