விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னக் கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி சுவாதி. இவர்களுக்கு 3 வயதில் விஷ்ணு பிரியா என்ற பெண் குழந்தை இருந்தது. கணவர் துரைப்பாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வீட்டிற்கு வராததால், சுவாதி தாய் வீட்டில் தங்கி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சிவகாசியைச் சேர்ந்த 27 வயதுடைய விக்னேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, சுவாதி தனது குழந்தையுடன் சிவகாசி திருத்தங்கலில் விக்னேஸ்வரனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
விக்னேஸ்வரனும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், தினமும் குடித்துவிட்டு சுவாதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் சுவாதியின் 3 வயது பெண் குழந்தையான விஷ்ணு பிரியாவைத் தரையில் அடித்து, முடியைப் பிடித்து இழுத்து இரவு முழுவதும் கொடூரமாகச் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். நள்ளிரவில் சுவாதி குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியதும், போலீசில் சரணடைய ஆட்டோ எடுத்து வருவதாகக் கூறி விக்னேஸ்வரன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்கு போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய விக்னேஸ்வரனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
