தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (45) என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்துவதுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழிலையும் செய்து வந்தார். இந்நிலையில், இலஞ்சியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் சுதாகர் கத்தியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த குற்றாலம் காவல்துறையினரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமாரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேல இலஞ்சி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (35) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்த கொலையைச் செய்தது தெரியவந்தது. மாரியப்பனின் மனைவிக்கும் சுதாகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை கைவிடுமாறு மாரியப்பன் பலமுறை எச்சரித்தும் சுதாகர் கேட்காததால், ஆத்திரமடைந்த மாரியப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுதாகரை மாந்தோப்பிற்கு வரவழைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்கு காரணமான மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்களைக் குற்றாலம் காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட சுதாகரும், கொலை செய்த மாரியப்பனும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தென்காசி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
