தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார். ரஹ்மானின் வரவுக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறியது.

இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து அவரது வாரிசுகள் மூன்று பேருமே இசைத்துறைக்கு வந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியவர் என யுவன் ஷங்கர் ராஜாவை சொல்லலாம். யுவனுக்காக அவரது பல பாடல்களை இளையராஜா பாடியும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒருமுறை யுவன் ஷங்கர் ராஜா ஒரு மேடையில் யுவன் ஷங்கர் ராஜா ஒரு இசையமைப்பாளராக எனக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள் என்று கேட்டபோது இளையராஜா “முடிந்தளவுக்கு எலக்ட்ரானிக் இசைக் கருவிகளை தவிர்த்துவிட்டு இசைக் கலைஞர்களை வைத்து பாடல்களை உருவாக்கு. ஏனென்றால் art என்பது கலைஞர்கள் perform பண்ணினால்தான் வரும்” எனக் கூறியுள்ளார்.
