உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தினேஷ் என்ற நபர், ஹரியானா மாநிலம் குருகிராமின் பாத்ஷாபூர் பகுதியில் தனது மனைவி தல்மாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 16-ஆம் தேதியன்று தினேஷ் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு, தனது மனைவி திடீரென சுயநினைவை இழந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தல்மாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தங்களது வீட்டில் வழக்கமாக இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம் என்றும், சம்பவத்தன்று தனது மனைவி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்துவிட்டதாகவும் தினேஷ் போலீசாரிடம் பொய் வாக்குமூலம் அளித்துக் கதையை மாற்ற முயன்றுள்ளார்.
இதனை முழுமையாக நம்பாத காவல்துறையினர் தல்மாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருந்த நிலையில், அதில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்தது. இதையடுத்து தினேஷை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது, அவரே தல்மாவைக் கொலை செய்த திடுக்கிடும் உண்மைகளை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று இரவு கடும் மதுபோதையில் இருந்த தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே இரவு உணவு சமைப்பது தொடர்பாக வீட்டின் சமையலறையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற தினேஷ், தல்மாவின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
