உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாரணாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அந்தப் பெண் சென்றார். ஆனால், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், ரகசியமாக அவரது செல்போனில் ஜிபிஎஸ் (GPS) கருவியைச் செயல்படுத்தி கண்காணித்து வந்துள்ளார்.
மனைவி சென்ற இடத்தைக் கண்காணித்தபோது, ஒரு கட்டத்தில் அவரது இருப்பிடம் திடீரென ஒரு ஓயோ (OYO) ஹோட்டலில் நின்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்றார். அங்கே தனது மனைவி ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு கடும் கோபமடைந்தார். கணவரை எதிர்பாராத விதமாகப் பார்த்தவுடன், அங்கிருந்த கள்ளக்காதலன் தப்பியோடிவிட்டான்.
இதனைத் தொடர்ந்து, தம்பதியிடையே ஹோட்டல் வளாகத்திலேயே கடும் வாக்குவாதமும் மோதலும் வெடித்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திருமணமான 15 நாட்களிலேயே ஜிபிஎஸ் உதவியுடன் கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவியின் இந்த விவகாரம், அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
