சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் கருணாகரன். 51 வயதான இவர் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வாசலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்துள்ளது. பில்லி சூனியம் வைத்தது போல மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடந்ததை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள்.
அதில் கருணாகரன் வசிக்கும் வீட்டின் அருகே சிறிது தொலைவில் சுடுகாடு உள்ளதும் அங்கிருந்து மண்டை ஓடும் மற்றும் எலும்புகளை எடுத்து வந்து மர்ம நபர்கள் யாரோ அவர் வீட்டின் வாசல் முன்பு வைத்துவிட்டு சென்றிருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக கருணாகரனை பயமுறுத்துவதற்காக மனித மண்டை ஓடு, எலும்புகள் வைத்து பில்லி சூனியம் செய்துவிட்டு யாரேனும் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
