மும்பை கோரேகான் பகுதியில் உள்ள ஆரே மெட்ரோ நிலையம் அருகே நேற்று பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பற்றுவதற்கு முன்பு பேருந்தில் இருந்து புகை வெளியேறியதுடன், வெடிச்சத்தம் போன்ற சத்தமும் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன், தீயணைப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட முகாமையினர் விரைந்து சென்று நிலைமையைைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தச் சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பரவிய அடர்ந்த புகை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக் கருதி, ஆரே மெட்ரோ நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, புகைக் கூட்டங்கள் நிலையத்திற்குள் செல்வதைத் தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டன.
புகை முழுமையாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மும்பை மெட்ரோ ஆபரேஷன் கார்ப்பரேஷன் மெட்ரோ சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்த தகவல்களும், பேருந்துக்குள் பயணிகள் இருந்தனரா என்பது குறித்த விவரங்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
