தமிழகத் தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் ‘டெண்டர்’ (Tendered Votes) வாக்குகள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ஸ்ரீபெரும்புதூரில் 16, ஆலந்தூரில் 15, காஞ்சியில் 7 என மொத்தம் 38 வாக்குகள் இவ்வாறு பதிவாகியுள்ள நிலையில், மற்ற பகுதிகளிலும் இந்த எண்ணிக்கை வழக்கத்தை விட உயர்ந்துள்ளதால் தேர்தல் ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிகளின்படி, ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வரும்போது அவரது வாக்கு ஏற்கனவே வேறொருவரால் கள்ள ஓட்டாகச் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால், அந்த உண்மையான வாக்காளர் தனது அடையாளத்தைச் சரிபார்த்துவிட்டு ‘பிரிவு 49P’-ன் கீழ் டெண்டர் வாக்கு அளிக்க உரிமையுண்டு. இருப்பினும், ஜனநாயகக் கடமையாற்ற வரும் வாக்காளர்களுக்குப் பதிலாக மர்ம நபர்கள் முறைகேடாக வாக்கு செலுத்துவது அதிகரித்து வருவது, தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முறையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
