நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், சமீபகாலமாகத் தனது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் துணிச்சலான கருத்துக்களால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறார். சென்னையில் ஊட்டச்சத்து மருத்துவமனை நடத்தி வரும் இவர், தன்னைத் திமுகவில் இணைத்துக் கொண்டு கட்சியின் முக்கியப் பொறுப்பிலும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை அரசியல் மேடைகளிலும் இன்ஸ்டாகிராமிலும் கடுமையாக விமர்சித்து வந்த திவ்யா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும், கட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணம் மற்றும் உறவுகள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. “ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைந்ததற்காக மட்டும் சேர்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை, அவர்களுக்குள் உண்மையான காதல் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், ஜாதகம் பார்த்து அவசரமாகக் குறிக்கப்படும் திருமணங்களின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். மேலும், இருவருக்குள் ஈர்ப்பு இருந்தால் அவர்கள் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம் அல்லது தனித்தனியாக இருந்துகூட உறவைத் தொடரலாம் என்றும், திருமணத்திற்கு வெளியே குழந்தை பெற்றுக் கொள்வதில் தனக்கு உடன்பாடு உண்டு என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தந்தை சத்யராஜ் திரையில் பெரியாரியக் கொள்கைகளையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் நகைச்சுவை கலந்து மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் என்பதை திவ்யாவின் இந்தப் பேச்சு நினைவுபடுத்துகிறது. தந்தையைப் போலவே மகளும் சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து, தனது முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படையாகப் பேசி வருவது இணையதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. பாரம்பரியக் குடும்ப அமைப்புகளைத் தாண்டி, தனிமனித விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திவ்யாவின் இந்தப் பேச்சு, அவரை ஒரு தீவிரப் பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்தியுள்ளது.
