புதுச்சேரியை சேர்ந்த சங்க பிரியா என்ற சான் ரேச்சல் (26) மாடலிங் தொழில் செய்து வந்தார். இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்ற பதக்கங்களை வென்றவர். அழகி போட்டிகளில் பல்வேறு விருதுகளை பெற்ற இவர் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகளை எடுத்து வந்தார். இப்படியான நிலையில் புதுவை நூறு அடி ரோடு ஜான்சி நகரை சேர்ந்த சத்யா என்பவரை இவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. மாடலிங் பயிற்சி வகுப்பு நடத்தியும், அவர் காதல் திருமணம் செய்து கொண்ட போதும் செலவுக்காக பலரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான் ரேச்சல் தனது தந்தை காந்திக்கு போன் செய்து தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை மகள் வீட்டுக்கு விரைந்து வந்த நிலையில் அங்கு மயங்கி கிடந்த மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது மாடல் அழகி தற்கொலைக்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், நான் தனது குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன் வாங்கினேன். அந்த கடனை தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை. உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
