மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது இரண்டு நாள் லண்டன் பயணத்தின் போது, அம்மாநகரின் வீதியொன்றில் நின்றபடி காரசாரமான மிளகாயுடன் ‘வதா பாவ்’ சாப்பிட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவசேனா தலைவர் ராகுல் கனாலுடன் சேர்ந்து அவர் இந்த மஹாராஷ்டிரா உணவை சுவைக்கும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லண்டன் பயணத்தின் போது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் “ஜெய் மகாராஷ்டிரா” என்ற முழக்கத்தை எழுப்பிய ஷிண்டே, அங்குள்ள மராத்தி சமூக மக்களுடனும் கலந்துரையாடினார். மேலும், ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ ஆகிய இடங்களில் அவருக்குச் சிறப்பு விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டன.
வணிக ரீதியிலான இச்சந்திப்பில், லண்டன் முதலீட்டாளர்களை மகாராஷ்டிராவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். தொழில்நுட்பம் மற்றும் பசுமை உள்கட்டமைப்பில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம், 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் மகாராஷ்டிராவின் இலக்கிற்கு உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
