செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹபிபுன் நிஷா, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். “பெண்கள் மாத சம்பளத்தில் மட்டும் முடங்கி விடக்கூடாது, அவர்களுக்கென தனி தொழில் தொடங்க வேண்டும்” என ஜிம் டிரைனர் மற்றும் குடும்ப நண்பரான யாசர் அரபத், நிஷாவை ஊக்குவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று நிஷா கூற, “உன் பெயரில் வங்கியில் 1 கோடி ரூபாய் லோன் வாங்கி தருகிறேன், கையெழுத்து போடு” என்று யாசர் கூறியுள்ளார்.
அதற்கு நிஷா, “எனக்கு எப்படி ஒரு கோடி ரூபாய் லோன் கிடைக்கும்? நான் ஏற்கனவே 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். என்னுடைய எலிஜிபிளிட்டி 15 லட்சம் தானே!” என கேட்டுள்ளார். “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், நீ கையெழுத்து மட்டும் போடு” என யாசர் கூறியுள்ளார். மேலும் நிஷாவின் பெயரில், 4 வங்கிகளில் இருந்து, 60 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, அந்தப் பணத்தை தனது கணக்குகளில் மாற்றி, இருவரும் சேர்ந்து ஹோட்டல் பிசினஸ் செய்யலாம் என கூறியுள்ளார்.
பின், “பகுஸ் பிரபுஸ் அண்ட் ரெஸ்டாரன்ட்” என்ற ஹோட்டலை தொடங்கி, இரவு நேரங்களில் பெண்களை அழைத்து வந்து, மது & கஞ்சா போன்ற சட்ட விரோத செயல்களில், யாசர் ஈடுபடுத்தியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்த்து கேள்வி கேட்ட நிஷாவை, அவதூறாக திட்டி மிரட்டியுள்ளார், யாகர். மேலும் நிஷா மற்றும் அவரது சகோதரர்கள் யாசர் வீட்டுக்குச் சென்று, ஓட்டல் கணக்குகளை கேட்ட பொழுது, அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்த நிலையில், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார், நிஷா.
இதைக்கேட்ட ஆத்திரம் அடைந்த யாசர், அவரது மனைவி இருவரும் சேர்ந்து நிஷாவை, செருப்பு & துடப்பத்தால் அடித்துள்ளனர். இதனை நிஷாவின் உடனிருந்த மற்றொரு சகோதரர் வீடியோ எடுத்து, தற்போது அது இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில் நிஷா புகார் அளித்த போது, “இது சிவில் கேஸ் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்” என போலீசார் அலட்சியமாக கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிலம்பரசன், யாசருக்கு ஆதரவாக “ஹோட்டலின் பூட்டை உடைத்து, நீங்களே நடத்துங்கள்” என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தன் மீது கடன் சுமத்தப்பட்டதாலும், காவல்துறையின் அலட்சியத்தாலும், மன உளைச்சலுக்கு உள்ளான நிஷா, தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
