ஈரோடு மாவட்டம் லக்காபுரம் பகுதியில், 12 வயது பேரனுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயது பாட்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்து வரும் அச்சிறுவனை, பெற்றோர் வெளியூர் செல்லும் நேரங்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் பாட்டி வீட்டில் விட்டுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக அந்தப் பாட்டி சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் வழக்கம் போல பாட்டி வீட்டிற்குச் செல்லுமாறு பெற்றோர் கூறியபோது, அச்சிறுவன் அங்கு செல்ல மறுத்து கதறி அழுதுள்ளான். பெற்றோர் பதறியடித்துக் காரணம் கேட்டபோது, பாட்டி தனக்குச் செய்து வந்த அக்கிரமங்களை சிறுவன் வெளிப்படுத்தியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அச்சிறுவனின் பாட்டியைக் கைது செய்து போக்சோ பிரிவின் கீழ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
