தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.
அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.
கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.
செந்தில் கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். இப்படி 25 வருடங்களுக்கு மேலாக இணைந்திருந்த அவர்கள் கடைசி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்கவில்லை. அதன் பின்னர் தனித்தனியாக படங்களில் நடித்தாலும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில் இதுபற்றி இருவருக்கும் மிகவும் நெருக்கமானவரான நகைச்சுவை எழுத்தாளர் சாய் ராஜகோபால் பேசியுள்ளார். அதில் “இருவரும் பிரியவே இல்லை. இப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கவுண்டமணி சார் சில படங்களில் செந்திலோடு நடிப்பார். சில படங்களில் செந்தில் இல்லாமல் நடிப்பார். கதையப் பொறுத்து கதாநாயகனோடு ட்ராவல் பண்ணுவது போல நடிப்பார். ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் கூட நான் செந்திலை நடிக்க வைக்கலாம் என நினைத்தேன்.
ஆனால் அவர் புது காம்பினேஷனாக இருக்கட்டும். யோகி பாபுவை போடலாம் என்றார். இதுவும் கிட்டத்தட்ட கவுண்டமணி செந்தில் ஸ்டைல்தான். என்ன செந்திலுக்குப் பதில் யோகி பாபு வருவார்” எனக் கூறியுள்ளார்.
