நேற்று மதியம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேரோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஆனது சில வினாடிகளிலேயே அங்கிருந்த மருத்துவ வளாகத்தின் மீது மோதி வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாக அம்மா மரணம் அடைந்த நிலையில் நேற்று விமான விபத்தில் அப்பாவும் மரணம் அடைந்ததால் இரண்டு இந்திய வம்சாவளி பெண் குழந்தைகள் லண்டனில் தவித்து வருவதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் அர்ஜுன் பட்டோலியா என்பவர் தன்னுடைய மனைவி பாரதி பென் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்த நிலையில் பாரதி பென் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு உயிர் இழந்துள்ளார்.
அவருடைய அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு சென்று அங்குள்ள நர்மதை ஆற்றில் கரைக்க வேண்டும் என்றும், கடைசி ஆசையாக கேட்ட நிலையில் லண்டனில் இருந்து வந்து அர்ஜுன் பட்டோலியா தன்னுடைய மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய அஸ்தியை இந்தியாவில் உள்ள நர்மதை ஆற்றில் கரைத்து விட்டு மீண்டும் லண்டன் திரும்பும் போதுதான் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு எட்டு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகள்கள் உள்ளார்கள். ஒரு வாரத்திற்கு முன்பாக தாயை இழந்த அந்த பிள்ளைகள் இப்போது தந்தையையும் இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
