திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனை குறித்து செய்தி சேகரித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரான ஹாஜா மொகைதீன் (38) என்பவர், அப்பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா விற்பனை குறித்துத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல், செய்தியாளரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில், கஞ்சா வழக்கில் கைதாகி சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அப்துல் பாசித் என்பவன் இருப்பது தெரியவந்துள்ளது. அவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளான். செய்தியாளர் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சக பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அப்துல் பாசித் மற்றும் அவனது கஞ்சா கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
