தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.
1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.
அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவரின் வீழ்ச்சி தொடங்கி 90 களின் ஆரம்பத்திலேயே அவர் தன்னுடைய் மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தார்.

ராமராஜனை அப்படி ஒரு சூப்பர் ஸ்டார் ஆக்கியது கங்கை அமரன் இயக்கிய படங்கள் என்று சொன்னால் மிகையாகாது. அதிலும் அவர்கள் கூட்டணியில் உருவான ‘கரகாட்டகாரன்’ படம் தமிழ் சினிமா காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கங்கை அமரன், ராமராஜன் பற்றி பேசும் போது “ராமராஜன் ஒரு விபத்துதான். உண்மையிலேயே அவர் அப்படி ஒரு நடிகராக வருவார் என்று யாருமே நினைக்கவில்லை. கரகாட்டக்காரன் படம் எல்லாம் இப்படி ஓடும் என்று நானே நினைக்கவில்லை. நாங்கள் சாதாரணமாகதான் காட்சிகளை எடுத்தோம். அவர் அதிர்ஷ்டமும் என் அதிர்ஷ்டமும் சேர்ந்துதான் அப்படி ஒரு வெற்றி கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.
