திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியசெல்வம் (48) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சங்கிலி முருகனைக் காரில் கடத்திச் சென்று திண்டுக்கல் – கொடைரோடு சாலையில் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், சடலத்தை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கீழ்நிலை நீர்த்தொட்டிக்குள் வீசியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியசெல்வத்தின் மகளைச் சங்கிலி முருகன் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதன்பேரில் பாக்கியசெல்வம் உட்பட 3 பேரைக் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
