“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அந்த செயலி மூலம் இவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள டோல்கேட் அருகே வரும்படி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற பச்சைமுத்துவை, உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள மதியனூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதும், அந்த மர்ம நபர்கள் திடீரெனப் பச்சைமுத்துவைக் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு, அவரிடம் இருந்த ரூ.4,000 பணத்தைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

   

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய பச்சைமுத்துவை, அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்ப்பேட்டை போலிஸார், பாதிக்கப்பட்ட இளைஞரின் செல்போன் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, இருவரையும் போலிஸார் அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.