தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி 42 வயதான வித்யா. திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாததால், இந்தத் தம்பதியினர் நீண்ட நாட்களாகக் கடுமையான மன உளைச்சலிலும் வேதனையிலும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மகிழங்கோட்டை மேலக்காடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்த வித்யா, வீட்டின் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று திடீரெனத் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். தீயின் வேதனை தாங்காமல் அவர் போட்ட அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மனைவி தீக்குளித்து இறந்த தகவலைச் சண்முகநாதனிடம் கூற உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடிய நிலையில், மதுக்கூர் அருகே பத்தாங்காடு கிராமத்தில் உள்ள மரத்தில் சண்முகநாதன் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் அடுத்தடுத்துக் கணவனும் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த நெஞ்சை பிழியும் சம்பவம் தஞ்சாவூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
