வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் 28 வயதான மோனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மோனிஷா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே, கடந்த 13-ஆம் தேதி கணவர் சரத்குமார் திடீரென உயிரிழந்தார். உயிருக்கு உயிராக நேசித்த கணவனின் திடீர் மறைவைத் தாங்க முடியாமல் மோனிஷா கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அழுதுகொண்டே கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாத மோனிஷா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த தாய், 4 வயது பெண் குழந்தையைத் தவிக்க விட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
