நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் காரணமாக, சைபர் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியாளர்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் கைது’ என்ற புதிய வகை மோசடி அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண்மணி ஒருவர், ஆறு மாதங்களாக வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ₹33 கோடிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். தொலைபேசியில் மிரட்டிய மோசடியாளர்கள், அப்பெண்ணின் வீட்டைக் கண்காணிப்பதாகவும், போலீஸைத் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் பயமுறுத்தினர்.
மகளின் திருமணம் நடக்கவிருந்த நிலையில், குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்ற பயத்தில், அப்பெண் அவர்கள் கூறியபடி 187 வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்து, 33 கோடியை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடியாளர்கள் கொடுத்த தொடர் மனஅழுத்தத்தின் காரணமாக அப்பெண் மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
