திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் கோஸ் (37) என்பவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண்ணிற்கு முதல் கணவருடன் ஏற்பட்ட விவாகரத்திற்குப் பிறகு, ரஞ்சித் கோஸ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். கூலி வேலை செய்து வந்த ரஞ்சித், பின்னர் தனது குடும்பத்துடன் பிழைப்பிற்காகத் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து ஊத்துக்குளி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
அங்கு வசித்து வந்தபோது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சித் கோஸ் தனது இரண்டாவது மனைவியின் 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இக்கொடூரம் குறித்துத் தனது தாயிடம் கூறக் கூடாது என்றும் அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளார். முதலில் பயத்தின் காரணமாக அமைதியாக இருந்த சிறுமி, ரஞ்சித்தின் அத்துமீறல் தொடர்ந்ததால் ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது மகளைக் காப்பாற்றக் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பெண்ணின் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காங்கேயம் போலீசார், ரஞ்சித் கோஸைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் செய்த குற்றத்தைச் சிறுமியின் வளர்ப்பு தந்தை ரஞ்சித் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்ட அவருக்குக் கடுமையான சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
