அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் கட்சியின் வீழ்ச்சி குறித்து முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பணபலத்தால் பொதுச்செயலாளர் பதவியைப் பிடித்த தற்போதைய தலைமை, கட்சியின் உண்மையான தொண்டர்களைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உங்களை யாரும் எம்.ஜி.ஆராகவோ அல்லது ஜெயலலிதாவாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பொறுப்புக்கு வந்ததால் மக்களிடமும் தொண்டர்களிடமும் உங்களுக்கு ஆதரவு இல்லை என்றும் அவர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியைச் சாடியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வளர்ச்சிக்கு அதிமுக தலைமையின் பலவீனமும், ஆணவமுமே காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதிமுகவின் வாக்குகள் தவெகவை நோக்கிச் செல்வதை தலைமை இன்னும் உணரவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 2017 முதல் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களின் பட்டியலையும், 2018-ல் பாஜாக குறித்த தனது கருத்திற்காக எவ்வித விளக்கமும் கேட்காமல் தன்னை நீக்கியதையும் சுட்டிக்காட்டிய கே.சி.பி, கட்சியை விட்டு விலகுபவர்களை ‘துரோகி’ என்று முத்திரை குத்துவதை தலைமை நிறுத்த வேண்டும் என்றார். மேலும், “தேர்தலில் 20 கோடி ரூபாய் கொடுத்தால்தான் சீட்டு” என்ற நிலையை உருவாக்கி அரசியலை வியாபாரமாக்கியதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் பதிவிட்டுள்ளார்.
திமுக எதிர்ப்பு, ஊழலற்ற ஆட்சி மற்றும் சாதாரண தொண்டர்களுக்கான அங்கீகாரம் ஆகியவையே அதிமுகவின் உண்மையான பலம் என்பதை நினைவுபடுத்திய அவர், தற்போதைய தலைமையின் கீழ் அதிமுக இனி ஒருபோதும் வெற்றி பெறாது என்று தொண்டர்கள் உணர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்த இந்த இயக்கம் மீண்டும் வலுப்பெற வேண்டுமென்றால் ‘தலைமை மாற்றம்’ ஒன்றே ஒரே தீர்வு என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றத்திற்கு தற்போதைய தலைமை ஒத்துழைக்கத் தவறினால், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
