ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரத்தில், திருவல்லிக்கேணி போலீசார் தற்போது மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர். தவெக ஆட்சியைக் கலைக்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றதாகப் பதிவான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள ஐபிடிஎஸ் திருநாவுக்கரசுவின் ஓட்டுநரான கிருஷ்ணா என்பவரை போலீசார் சற்றுமுன் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தக் குதிரை பேர விவகாரம் தொடர்பாக போலீசார் ஏற்கனவே 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது கிருஷ்ணாவும் சிக்கியுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. எம்.எல்.ஏ இளையராஜாவிடம் நடத்தப்பட்ட பேரம் மற்றும் அதற்குப் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், ஓட்டுநர் கிருஷ்ணாவின் கைது இந்த வழக்கில் மேலும் முக்கியப் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
