திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த செய்தி பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சந்தீப் ஆனந்த் தரப்பிலிருந்து இதுவரை இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்கப்படாதது இந்த ஊகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
மாற்றுக்கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தலைமை தீவிரமாக வியூகம் அமைத்து வரும் வேளையில், சொந்தக் கட்சியின் முக்கிய வாரிசே மாற்றுப் பாதைக்கு மாறவிருப்பது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள அவரைச் சமாதானப்படுத்தி, கட்சியை விட்டுச் செல்லாமல் தடுப்பதற்காக திமுக தரப்பில் திரைக்குப் பின்னால் தீவிரப் பேச்சுவார்த்தைகள் தற்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
