கோவை அருகே பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் நடந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் நடப்பட்டிருந்த செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கட்டுப்பாட்டை இழந்து பலத்த வேகத்தில் மோதியது. இந்த பயங்கர மோதலில் கார் முற்றிலுமாக நசுங்கியதில், காரில் பயணித்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என அனைவரும் வாகனத்திற்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், நொறுங்கிய காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் அதிவேகக் கட்டுப்பாடு இழப்புதான் இவ்விபத்திற்கு முதன்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் ஓட்டுநரின் கவனச்சிதறல் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நொடிப் பொழுதில் 5 உயிர்களைப் பலிகொண்ட இந்த துயர நிகழ்வு அப் பகுதி மக்களிடையே ஆழந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
