தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்டு பாதியிலேயேக் கைவிடப்பட்ட மூன்று படங்கள் பற்றிப் பார்க்கலாம்.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு செல்வராகவன் விக்ரம் மற்றும் சுவாதியை வைத்து ‘சிந்துபாத்’என்ற படத்தைத் தொடங்கினார் . இதற்காக டார்ஜிலிங்கில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ஆனால் படம் அதன் பிறகு தொடரவில்லை. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சிம்புவை வைத்து “கான்” என்ற படத்தை அறிவித்து சில நாட்கள் ஷூட்டிங்கும் நடத்திப் பின்னர் கைவிடப்பட்டது.
கடைசியாக சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ என்ற படத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட 80 சதவீதம் ஷூட்டிங் நடந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது. இந்த படங்கள் எல்லாம் இனிமேல் வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றுதான் திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.