உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை பெண் மருத்துவப் பணியாளர் ஒருவர் காலால் எட்டி உதைத்து வெளியேற்றும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்தின் தரையில் அமர்ந்திருக்கும் அந்த நபரை, அங்கிருந்த பெண் ஊழியர் இரக்கமின்றி காலால் உதைத்து, தரதரவென இழுத்துச் செல்ல முயலும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
இந்தக் கொடூரமான சம்பவம் அங்கிருந்தவர்களால் மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் மருத்துவப் பணியாளர்கள் இப்படித்தான் அநாகரீகமாக நடந்துகொள்வதா எனக் கடுமையான கண்டனங்களையும், தங்களின் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ரேபரேலி மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தவறிழைத்த அந்தப் பெண் ஊழியர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நோயாளிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
