தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக 20 ஏக்கர் நிலத்திலும், என்.டி.ஆர் மாவட்டம் காந்த்ராயியில் குத்தகைக்கு எடுத்த 10 ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தில் ஏற்பட்ட கடுமையான இழப்பு மற்றும் கடன் சுமை காரணமாக மனமுடைந்த அவர், தனது மகள் லாஸ்யா மற்றும் மகன் நிகில் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தான் குத்தகைக்கு எடுத்திருந்த வயலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து தனது இரு குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாகக் குடிக்கக் கொடுத்த சீனிவாச ராவ், தொடர்ந்து தானும் அதே விஷத்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். மயங்கிக் கிடந்த மூவரையும் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, அவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவசாயி சீனிவாச ராவ் மற்றும் அவரது மகள் லாஸ்யா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடி வரும் மகன் நிகிலுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நெலகொண்டபள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
