தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன.
அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் வெளியிட்டு வருகின்றார். கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார்.
இப்படியான நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து பேசினார். இவர்களுக்கு இடையேயான ஆலோசனைக்கு பிறகு அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் சேர்க்கும் திட்டத்தை அமித்ஷா பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் கட்சியில் குழப்பம் ஏற்படும் என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பாஜகவும் அதிமுகவும் புதிய கூட்டணி அமைப்பது குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிகிறது. இது தமிழக அரசியலில் தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
