சென்னை புழல் பகுதியை சேர்ந்த 47 வயதான பெண் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு கர்ப்பப்பை தொற்று இருந்த காரணத்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அந்தப் பெண் ஸ்கேன் எடுப்பதற்காக கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கேன் சென்டரில் வேலை செய்யும் நபர் ஒருவர் ஸ்கேன் எடுக்கும் போது அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது தொடர்பாக வீட்டுக்குச் சென்று தனது கணவரிடம் தெரிவித்த நிலையில் இருவரும் சேர்ந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த ஜில் கவின் (28) என்ற நபர் சென்னையில் தங்கிய தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்ததும் இவர் ஸ்கேன் எடுக்க வந்த அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
