மணிரத்னம்- இளையராஜா- கமல்ஹாசன் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு மைல்கல் திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறைக்கு பிறகு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்த படத்தின் உருவாக்கத்தின் போது பல பிரச்சனைகளை படக்குழுவினர் சந்தித்துள்ளனர். படத்தின் கதை மும்பையைச் சேர்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் பரவ, அவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, அவரை தேடி சென்றுள்ளனர். ஒருவழியாக அந்த பிரச்சனையை முடித்தால் படம் சென்சாரில் குற்றச் செயல்களை ஆதரிப்பதாக பிரச்சனை கிளம்பியுள்ளது.
இதே போல பட உருவாக்கத்தின் போதே இயக்குனர் மணிரத்னத்துக்கும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனுக்கும் இடையே பில்ம் ரோல் சம்மந்தமாக பிரச்சனைகள் எழுந்துள்ளன. இந்த படத்துக்காக மணிரத்னம் எடுத்த காட்சிகளை எடிட் செய்து பார்த்த போது 6 மணிநேரம் ஓடும் அளவுக்கு படம் வந்துள்ளது.
இதையடுத்து படத்தை எடிட் செய்ய அப்போதைய திரைக்கதை வல்லுனர்களான மௌலி, பஞ்சு அருணாச்சலம் ஆகியோரை அழைத்து படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளனர். அவர்கள் ஆளாளுக்கு ஒரு கரெக்ஷன் சொல்லியுள்ளனர்.
இறுதியில் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் யார் அறிவுரையும் வேண்டாம் எனக் கூறிவிட்டு எடிட்டர் லெனினை அழைத்து படத்தை நீயே ட்ரிம் செய்து இரண்டரை மணிநேரத்துக்கொண்டு வா என சொல்லியுள்ளார். அதன் பிறகுதான் லெனின், அனைவரையும் வெளியே போக சொல்லிவிட்டு இரவு பகலாக வேலை செய்து படத்தின் காட்சிகளை ட்ரிம் செய்து இப்போதிருக்கும் வடிவத்துக்குக் கொண்டுவந்தார். அதனால் நாயகன் படத்தின் இயக்குனர்களில் அவரும் ஒருவர் என படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.