தமிழகத்தில் தவெக அரசுப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்காக 500 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காகப் போடப்பட்டிருந்த டெண்டரை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது.
அதேநேரம், பொதுமக்களின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய ஏதுவாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தனியாரிடமிருந்து 625 பேருந்துகளைப் பெற்று இயக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சாரப் பேருந்து டெண்டர் மட்டுமன்றி, முந்தைய ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் திட்டங்கள் தொடர்பான டெண்டர்கள் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களையும் புதிய அரசு ரத்து செய்திருப்பது தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
