ஜெய்ப்பூர் இஸ்கான் சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண்ணிடம், பைக் சாகசம் செய்தபடி போதையில் தவறாக நடந்துகொண்ட நான்கு சமூக விரோதிகளைக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 27, 2025 அன்று நடந்த இந்த அருவருப்பான செயலை, ‘ரீல்ஸ்’ எடுத்துப் பிரபலம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மன்ராஜ், சுதாமா, லோகேஷ் மற்றும் மகேஷ் ஆகியோர் தங்களது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ ஆதாரமே அவர்களைக் காட்டிக்கொடுக்க, தலைமறைவாக இருந்த இவர்களைத் தேடிச் சென்று காவல்துறை தற்போது சிறையில் அடைத்துள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து முறையான புகார் எதுவும் வராத போதிலும், வைரலான வீடியோவை ஆதாரமாகக் கொண்டு தெற்கு துணை ஆணையர் ராஜர்ஷி ராஜ் தலைமையிலான காவல்துறை தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. சைபர் நிபுணர்களின் உதவியுடன் பைக் எண் மற்றும் சமூக ஊடக முகவரிகளை வைத்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். காவல்துறையினர் வருவதை அறிந்து டோங்க் வனப்பகுதியில் ஒளிந்துகொண்ட அவர்களை, பல நாட்கள் அங்கேயே முகாமிட்டிருந்த தனிப்படையினர் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மன்ராஜ் மீனா என்பவர் ஏற்கனவே பல்வேறு தாக்குதல் வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் ‘லைக்ஸ்’ மற்றும் ‘ஃபாலோவர்ஸ்’ பெற வேண்டும் என்ற பேராசையில் பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் எனத் துணை ஆணையர் எச்சரித்துள்ளார். ஜெய்ப்பூர் வீதிகளில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ‘நிஜ’ வாழ்க்கையில் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
