சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை, இறந்து கிடக்கும் காக்கைகளை பொதுமக்கள் வெறும் கைகளால் தொட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சேகரிக்கப்பட்ட இறந்த காக்கைகளின் மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதே இந்த எச்சரிக்கைக்கு முக்கிய காரணமாகும். தற்போது கண்டெடுக்கப்பட்ட காக்கைகளின் மாதிரிகளும் விரிவான ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு (TANUVAS) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் காக்கைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டால், உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
