தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதை திமுக கடுமையாகச் சாடியுள்ளது. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் திடீரென தவெக பக்கம் சாய்ந்தது ‘மக்களின் முதுகில் குத்தும் செயல்’ என்று திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் விமர்சித்துள்ளார். திமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தவிட்டு, இப்போது தவெக-விற்கு ஆதரவு அளிப்பது வாக்காளர்களை ஏமாற்றும் செயல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது தமிழகச் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்த 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்துக்கொண்டு, தவெக அமைக்கவுள்ள புதிய அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காகவே காங்கிரஸ் இத்தகைய அதிரடி முடிவை எடுத்துள்ளதா என சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார். பதவிக்காகக் கட்சியின் கொள்கைகளையும், பல கால நட்பையும் காங்கிரஸ் அடகு வைத்துவிட்டதாக திமுக தரப்பில் காரசாரமான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.
“2 அமைச்சர் பதவிக்காகக் காங்கிரஸை ஊத்தி மூடத் துணிந்துவிட்டீர்களா?” என சரவணன் எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதன் மூலம் காங்கிரஸ் தனது அரசியல் எதிர்காலத்தைச் சிதைத்துக்கொள்வதாகவும், ஒரு சில பதவிகளுக்காகத் தேசியக் கட்சியின் நற்பெயரைக் கெடுத்துக் கொள்வதாகவும் திமுக தரப்பில் சரமாரி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த மோதலால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. ஒருபுறம் தவெக ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைத் திரட்ட முயற்சி செய்து வரும் நிலையில், மறுபுறம் திமுக தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்து வருகிறது. காங்கிரஸின் இந்தத் திடீர் கட்சித் தாவல் போன்ற நகர்வு, வரும் நாட்களில் தமிழக அமைச்சரவை உருவாக்கத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
