வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலிருந்து தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன், கவுன்சிலர்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தார். நகராட்சியில் கொண்டுவரப்படும் திட்டப்பணிகள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநடப்பு செய்தபின் ஊடகங்களிடம் பேசிய சௌந்தரராஜன், “ஸ்டாலின் ஆட்சியில் நகராட்சி பொதுநிதி மூலம் நாங்கள் செய்துமுடித்த சாலை திட்டப்பணியை, ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்கூட ஆகாத குடியாத்தம் த.வெ.க எம்.எல்.ஏ சிந்து, தானே செய்ததுபோல வெக்கமில்லாமல் திறந்து வைத்து பல்லிளிக்கிறார். இந்த பணியை சிறப்பாகச் செய்தது யார் என்று அழைத்து சால்வைகூட போற்றவில்லை; எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், இந்த ஆட்சியில் இதுவரை சட்டமன்ற நிதி என 5 பைசாகூட ஒதுக்கப்படவில்லை” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள் செலுத்தும் சொத்துவரி மற்றும் குழாய் வரி மூலமே நகராட்சியின் பொது நிதி பெறப்பட்டு முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்போது, ‘பொது நிதியை எடுத்து எந்த பணிகளையும் செய்யக் கூடாது’ எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் கூறுகிறார். டெண்டர் வைக்கக் கேட்டால் மேலிருந்து உத்தரவு வரவில்லை எனக் காரணம் சொல்கின்றனர். அரசின் இந்த முடக்கத்தையும், அதிகாரிகளின் போக்கையும் கண்டித்துதான் நாங்கள் நகர்மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
