“ஒரே கல்.. ரெண்டு மாங்காய்”…. ஆர்.பி. உதயகுமாரை வீழ்த்த திமுக கையில் எடுத்த புதிய அஸ்திரம்….. வெளியான சீக்ரெட் ரிப்போர்ட்….!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மதுரையின் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கு மிக்க முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் திகழும் ஆர்.பி. உதயகுமாரை வீழ்த்த திமுக தலைமை மிகத் தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறது. உதயகுமாரின் வெற்றியைத் தடுப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் பிடியைத் தளர்த்த முடியும் என திமுக மேலிடம் உறுதியாக நம்புகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் தற்போதைய நிலை குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் சமீபத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் திருமங்கலம் தொகுதிக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டது. அந்தத் தொகுதியில் மீண்டும் ஆர்.பி. உதயகுமார் வெற்றி பெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என திமுக தலைமை நிர்வாகிகளுக்குக் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதற்காக திமுக வேட்பாளர் மணிமாறன் தரப்பில் ‘மைக்ரோ லெவல்’ எனப்படும் மிக நுணுக்கமான தேர்தல் பணிகள் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டுள்ளன.

   

திருமங்கலம் மட்டுமின்றி, மதுரை மத்திய தொகுதியிலும் நிலவும் உட்கட்சிப் பூசல்களைச் சரி செய்ய திமுக தீவிரம் காட்டி வருகிறது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தொகுதியில் நிலவும் பின்னடைவுகளைச் சரிசெய்து, கவுன்சிலர்களுக்கு இடையிலான கோஷ்டி மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர மாவட்டச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மதுரை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிப்பது குறித்தும், சௌராஷ்டிரா சமூக மக்களின் ஆதரவைத் திரட்டுவது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

   

கடந்த தேர்தலில் மதுரையில் 5 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக, இந்த முறை அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகப் பண்டிகைக் காலங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்தநாட்களை முன்னிட்டுப் பொதுமக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்குவது எனப் பல்வேறு மக்கள் தொடர்புப் பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தத்தில், ஆர்.பி. உதயகுமாரின் கோட்டையாகக் கருதப்படும் திருமங்கலத்தைத் தகர்ப்பதையே திமுக தனது கௌரவப் பிரச்சினையாகக் கருதி களம் கண்டு வருகிறது.