“1.31 கோடிப் பெண்கள், 6,550 கோடி ரூபாய் வங்கி கணக்கில்”… எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்ட பதிவு… ஒரே நாளில் ஆடிப்போன தமிழகம்….!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், ஒரே நாளில் 1.31 கோடிப் பெண்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 6,550 கோடி ரூபாய் வங்கித் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், உரிமைத் தொகை வழங்குவதில் தடங்கல் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த 5,000 ரூபாய் தொகையில், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகை தலா 1,000 ரூபாய் என மொத்தம் 3,000 ரூபாயும், அத்துடன் கோடைகால சிறப்பு நிதி உதவியாக 2,000 ரூபாயும் அடங்கும். இன்று அதிகாலை 6 மணிக்கே பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கு இந்தப் பணம் நேரடியாகச் சென்றடைந்தது. “யார் தடை ஏற்படுத்தினாலும் மகளிருக்கு வழங்கும் இந்த உரிமையிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்று முதல்வர் தனது எக்ஸ் (X) தளத்தில் உறுதியளித்துள்ளார்.

   

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், முதலில் 1.13 கோடிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது 1.31 கோடிப் பெண்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், அவர்களின் பொருளாதாரத் தேவையையும், குடும்பச் சுமையையும் பெருமளவு குறைப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

மேலும், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் இந்த மாதாந்திர உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மிக முக்கியமான வாக்குறுதியையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இந்தப் பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் பயனாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் திடீர் வரவு தமிழகப் பெண்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.