கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ரவிச்சந்திராவிற்கும், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்ணிற்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக பெண் தேடி வந்த ரவிச்சந்திராவின் குடும்பத்தினர், ரேகாவைப் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்திற்காக மணமகன் வீட்டார் தரப்பிலிருந்து மணப்பெண் வீட்டாருக்கு சுமார் 2.5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் முடிந்த நிலையில், ரவிச்சந்திராவின் தந்தைக்கு வந்த ஒரு மர்ம போன் அழைப்பு ஒட்டுமொத்த குடும்பத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதிர்முனையில் பேசிய இரண்டு சிறுவர்கள், “அங்கிள், எங்க அம்மா அங்கே இருக்காங்க, அவங்ககிட்ட போனைக் கொடுங்க” என்று கேட்டுள்ளனர். பதற்றமடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, அந்த சிறுவர்கள் ரேகாவைத் தங்கள் தாய் என்று அடையாளம் காட்டினர்.
இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திராவின் குடும்பத்தினர் ரேகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அந்த உண்மையை மறைத்து வெறும் பணத்திற்காகவே ரவிச்சந்திராவை அவர் ஏமாற்றித் திருமணம் செய்ததும் அம்பலமானது. உண்மை தெரிந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ரேகாவை, அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது ஹலகேரி காவல்துறையினர் ரேகாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்காகப் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் இளைஞரை ஏமாற்றிய இந்த விசித்திரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மோசடி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
