தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கி வரும் கூட்டணிக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜய், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கெஞ்சிக் கூத்தாடியே ஆட்சியை அமைத்தார் என்று சாடியுள்ள அவர், தவெக சார்பில் நேரில் வந்து ஆதரவு கேட்காதபோதிலும், காங்கிரஸ் கட்சி தனது மானத்தையும் மரியாதையையும் இழந்து அந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலையைச் சுட்டிக்காட்டிய அப்பாவு, அடுத்த பிரதமர் விஜய் தான் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் ஒருவர் பேசியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றது நாடே வெட்கித் தலைகுனியும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சிக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஒரு அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆணவக் கொலைகள் நடந்தபோதும் வாய் பொத்தி அமைதி காப்பதாகவும், கம்யூனிஸ்ட் இளைஞர்களின் அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் தவெக ஆட்சியை இடதுசாரிகள் சுமந்து திரிவது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்த திமுகவைக் கைவிட்டு, திடீரென உருவான தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது என்று அப்பாவு எள்ளி நகையாடியுள்ளார். தங்களது சுயநல அரசியல் காரணங்களுக்காக ஆதரவு அளித்ததால், பண்டிகைக் காலங்களில் கூடத் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்த முடியாமல் அக்கட்சியினர் தவித்து வருவதாகவும், திமுக கூட்டணியை விட்டு விலகியதன் விளைவை அவர்கள் இப்போது அறுவடை செய்து வருவதாகவும் தனது பதிவில் சாடியுள்ளார்.
இறுதியாக, காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் விஜய் கூட்டணி இணைந்து மக்களை ஏமாற்றி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஜென்சி இளைஞர்களிடம் செல்வாக்கை இழந்துவிட்ட பயத்தில், பல நூறு கோடி ரூபாய் செலவில் ‘விஜய் தளபதி’ என்ற போலி ரீல்களை இந்தியில் தயாரித்து, வட இந்தியா முழுவதும் ராகுல் காந்திக்கு எதிராகப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த பிரதமர் யார் என்ற போலியான கருத்துக்கணிப்புகளை உருவாக்கி மக்களைத் திசைதிருப்பும் இந்த நாடகத்தையும், தவெக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் பெயரில்லாக் கூட்டணிக் கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
