தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ரொக்க பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே மக்களுக்கு அரசியல் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் ரேஷன் கடைகளை சாராத நபர்கள் பொங்கல் பரிசு டோக்கன்களை வழங்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பரிசு தொகை எவ்வளவு என முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
