மூன்றாவது மாடியில் இருந்து குதி- பழி வாங்குவதாக கூறிக்கொண்டு எம்.ஆர்.ராதாவின் உயிருக்கே உலை வைத்த இயக்குனர், அடப்பாவமே!

By Arun on சித்திரை 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பழம்பெரும் கிளாசிக் நடிகராக திகழ்ந்த எம்.ஆர்.ராதா, நடிகவேள் என்ற புகழைப் பெற்றவர். அவரது திரைப்படங்களில் பகுத்தறிவு சிந்தனைகள் நிறைந்துகிடக்கும். அவர் கதாநாயகனாக நடித்த “ரத்தக்கண்ணீர்” திரைப்படம் காலத்தை தாண்டி நிற்கும் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது.

எம்.ஆர்.ராதா தொடக்கத்தில் நாடகத்துறையில் இருந்தவர். அதனைத் தொடர்ந்துதான் அவர் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் 1937 ஆம் ஆண்டு “ராஜசேகரன்” என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் எம்.ஆர்.ராதா. இத்திரைப்படத்தை பிரகாஷ் என்பவர் இயக்க இதில் சகாதேவன் என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

   

   

எம்.ஆர்.ராதா நாடகத்துறையில் மிகவும் திறமை வாய்ந்த நடிகராக திகழ்ந்தவர். அவரது நடிப்பை பல முக்கிய பிரபலங்கள் பாராட்டியிருக்கின்றனர். ஆதலால் “ராஜசேகரன்” திரைப்படத்தின் ஹீரோவான சகாதேவனுக்கு படப்பிடிப்பின்போது “இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும்” என்று அவ்வப்போது நடிக்கச் சொல்லிக்கொடுப்பாராம்.

 

இதனை கவனித்துக்கொண்டிருந்த இயக்குனர் பிரகாஷ், ஒரு நாள் எம்.ஆர்.ராதாவைப் பார்த்து “நீ டைரக்டரா இல்ல நான் டைரக்டரா?” என்று கோபத்தோடு கேட்க, அதற்கு எம்.ஆர்.ராதா தனது ஸ்டைலில் “நீங்கதான் டைரக்டர், இதுல எதுவும் உங்களுக்கு சந்தேகமா?” என்று கிண்டலாக பதிலளித்திருக்கிறார்.

எம்.ஆர்.ராதாவின் பதிலால் மேலும் கோபப்பட்ட இயக்குனர், எம்.ஆர்.ராதாவை பழிவாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். அத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் எம்.ஆர்.ராதா மூன்றாவது மாடியில் இருந்து குதித்து கீழே நின்றுகொண்டிருக்கும் குதிரை மீது அமர்வது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. முதல் ஷாட்டிலேயே அந்த காட்சியில் எந்த வித பயமும் இன்றி மூன்றாவது மாடியில் இருந்து தாவிக்குதித்து சக்கென்று குதிரையின் மீது உட்கார்ந்தார் எம்.ஆர்.ராதா.

ஆனால் எம்.ஆர்.ராதாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்த இயக்குனர், “இந்த ஷாட் சரியாக அமையவில்லை. ஒன்ஸ் மோர் போகலாம்” என்றார். ஆனால் படக்குழுவினரோ “இந்த ஷாட்டே அருமையாக வந்திருக்கிறது. இது போதுமே” என்று எடுத்துக்கூறியும் இயக்குனர் அவர்களின் பேச்சைக் கேட்கவில்லை.

தன்னை பழிவாங்குவதற்குத்தான் இயக்குனர் இவ்வாறு செய்கிறார் என்று புரிந்துகொண்ட எம்.ஆர்.ராதா, “சரி, நான் இன்னொரு முறை குதிக்கிறேன்” என்று மூன்றாவது மாடிக்குச் சென்றார். “ஆக்சன்” என்று இயக்குனர் கூறியதும் கீழே குதித்தார் எம்.ஆர்.ராதா.

இந்த முறை துர்திஷ்டவசமாக குதிரை சற்று விலகிவிட்டது. ஆதலால் கீழே விழுந்த எம்.ஆர்.ராதாவிற்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் எந்த திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் மருத்துவமனையிலேயே கிடந்தாராம் எம்.ஆர்.ராதா.